Thursday, March 19, 2009

காதல் ஓவியம்


குளிர்ந்த இரவில்

தனிமை துணை கொண்டு

ரயில் பயணம்..


சிதறிய சாரலில்

சில்லிட்டு போனது

ஜன்னல் கண்ணாடி..


பனி படர்ந்த

ஜன்னல் திரையில்

விரல் தூரிகைகொண்டு

கோலம் தீட்டினேன்...


முடிவில் முளைத்திருந்தது

உன் பெயர்

பனியில் படமாய்..


விரல் வகுத்த வழி

விழி பயணித்தது

மீண்டும் மீண்டும்

என்னை சுற்றும்

உன் நினைவுபோல்...


தன்னிலை அடைந்தபோது

நின்றுபோயிருந்தது மழை

உன் பெயரை

அழிக்க மனமில்லைபோலும்

என்னை போன்றே....

இழப்பு




அறை நடுவில் சடலம்..


கனவுடன் கண்ணீரும் புதைத்து
கல்லாய் மனைவி...


"வந்தார் போனார்
நிலைத்தார் யார்"
ஆறுதல் சொல்லும் சுற்றம்...

திணையளவும் துன்பமறியாமல்
துள்ளி திரிந்துகொண்டு பிள்ளை...


இறந்தவர் இழப்பா?
இல்லை,
சமூகம் சூரையாடபோகும் பிள்ளையின் சிரிப்பா???
எதை நினைத்து நான் அழ??